60 வருட சினிமா பாரம்பரியம் உடையது ஈழத்தின் சினிமா கலை........நம்ப முடியவில்லையா?.......ஆம் ஈழத்து சினிமா ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 60 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன......1951 மார்கழி 29 ம் திகதி நாம் முதன்முதலாக எமது திரை காவியத்தை தீட்டியிருந்தோம்.1960 தொடங்கி 1980 காலப்பகுதிகளில் எம்மவர்களின் முயற்சியினுடாக பல திரை காவியங்கள் படைக்கப்பட்டன.
தனித்துவமான மொழி,கலாச்சாரம் கொண்ட எங்களுக்கும் சினிமா எனும் பேனா கொண்டு கவிதை கிறுக்க பல காவியங்கள் இருந்தன,இருக்கின்றன.
1951 இல் தொடங்கிய எமது பயணம் 2010 வரை 30 வரையான திரைபடங்களை மாத்திரம் உருவாக்க முடிந்தது கவலையான விடயமாக பார்க்காமல்,ஒரு இமயத்தின் அடியில் இருந்து நமக்கான ஒரு சினிமாவை உருவாக்க முயற்சித்த நம் கலைஞர்களை நினைத்து பெருமைபட வேண்டும்.உலகம் நினைப்பதை விட வேகமாக தொழில்நுட்பத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது.அதற்கு போட்டியாக சினிமா கலையும் மிக வேகமான வளர்ச்சியை நோக்கி செல்கிறது
தமிழகத்தில் எம் கலைஞர்கள் உலகை வியக்க வைக்கும் சினிமா படைப்புகளை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.எமது புலம்பெயர் உறவுகள் தங்களது சினிமா படைப்புக்கள் ஊடாக முத்திரை பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் ஈழத்தின் படைப்புகள் வெளிவருவது அரிதாக உள்ளது.அவ்வாறு வெளிவந்தாலும் எல்லோரது பார்வைக்கும் செல்வது மிக அரிது.
மீண்டும் ஈழத்தில் சினிமாவின் தடம் பதிய ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி."மண்" என்ற படம் 2006 இல் ஈழத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவிடப்பட்டது .தற்போது "பனைமரகாடு" எனும் படம் ஈழத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவர இருகிறது எனும் செய்தி ஈழத்து சினிமா கலைஞர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நல்ல முயற்சிகளை மனதில் வைத்து,எமது கலாச்சாரம் பிண்ணிப்பினைந்த சினிமாவை கட்டி எழுப்ப நாம் முன்வரவேண்டும்.ஆரம்பத்திலே எல்லாவற்றையும் எட்டிப்பிடித்துவிட வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்.தொழில்நுட்பத்தில் சாதனை புரிவது ஒருபுறம் இருக்க,கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி இயல்பான சினிமா பயணத்தை ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றிகிட்டும்.எமது இளைஞர்களிடம் திறமை,வேகம் இருக்கிறது அதற்கு சரியான வழிகாட்டல் இருந்தால் நாளை நமது நாள் என்பதில் சந்தேகம் இல்லை.
அதற்காக,முதன்முதலாக ஈழத்து சினிமா உருவாகிய இந்நாளில் ஒரு சிறிய முயற்சியாக நாம் இவ் வலைபதிவை உருவாக்குகிறோம்.இதனூடாக எமது கலைஞர்களை உறவாட வைப்பது எமது விருப்பம்.ஈழத்தில் இருந்து வரும் படைப்புகளை உலகம் பார்வையிடும் ஒரு ஊடகமாக எதிர்காலத்தில் உருவாக்குவது இம் முயற்சியின் நோக்கம்.
அதற்காக நாம் எமக்கான பாதை ஒன்றை வகுத்து முயற்சித்தால் எமது மண்ணின் வாழ்க்கை முறை,கலாச்சாரத்தை திரையில் எழுத எம்மாலும் முடியும்.அதற்காக சினிமா துறையில் ஆர்வமுள்ள வளர்ந்துவரும் மற்றும் முதிர்ந்த கலைஞர்களை மனம் திறந்து அழைக்கிறோம்.ஈழத்தில் படமாக்கப்பட்ட குறும்படம்,ஆவணப்படம் எதுவாக இருந்தாலும் அதை பதிவேற்றலாம்.ஈழத்தில் குறும்படம்,ஆவணப்படம் வெளிவிட நினைப்பவர்கள் அது பற்றிய தகவல்களை அறியத்தரலாம்.இது எல்லோரையும் சென்றடையும் ஏனைய சினிமா கலைஞர்களின் கருத்துக்கள் பறிமாறும் ஒரு நல்ல வாய்ப்பாகும். நாம் இலக்கை அடைய துணை நிற்கும்.